இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜனவரி 25) மாலை உயிரிழந்தார். தற்போது அவரது உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பவதாரிணியின் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன்
”மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் – நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன்
“அன்புத் தோழி பவதாரிணியின் மறைவால் நான் மிகுந்த வருத்தம் அடைந்ததுள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான்
”மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது.
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயம் உங்களுடன் இருக்கிறது” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனிருத்
“பவதாரிணியின் மறைவால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால்
“இளையராஜா சாரின் மகளாகவோ, யுவனின் தங்கையாகவோ அல்லது வாசுகியின் உறவினராகவோ உங்களை நான் அறிந்ததை விட, ஒரு சகோதரியாக, என்னுடைய உறவினராக, உங்களை மிஸ் பன்றேன். உங்கள் முழு குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ்
“ஒலியிலே ஒளி பாய்ச்சிய தேவதையே, இனி என் விழி காண் மயில் நீ” என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு
”அப்பாவித்தனத்திற்காகவும் அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல். நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள்! சீக்கிரம் சென்றுவிட்டார்.
இளையராஜா சார் மற்றும் எனது சகோதரர் யுவன் சங்கர் ராஜா அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த தருணத்தில் வலிமை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
“இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்! கடவுள் குடும்பத்திற்கு எல்லா பலத்தையும் கொடுக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி
”தேன் குரலில் பாடும் சகோதரி பவதாரிணியின் மறைவு பேரதிர்ச்சி. எந்த தகப்பனுக்கும் தாங்க முடியாத துயரம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை…. இசைஞானிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி
”பவதாரிணியை இழந்து வாடும் இளையராஜா சார், யுவன் சங்கர் ராஜா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இது உண்மையில் இசைக்கு தாங்க முடியாத இழப்பு” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா