சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. மத்திய மாநில அரசுகளும் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் “நியோடிமியம்” (Neodymium) வகை காந்தம் தட்டுப்பாடு காரணமாக மின்சார வாகனங்களில் விலை அபாயம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கோவை மாவட்டத்தை இரு சக்கர மின்சார உற்பத்தி மையமாக மாற்ற தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. கோவை போன்ற பகுதிகளில் 2 சக்கரம், 3 சக்கர மின்சார வாகனங்களும், ஒசூரில் 4 சக்கர மின்சார வாகனங்களும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்குச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காந்தத்தையே இந்தியா சார்ந்துள்ளது. இந்நிலையில் சீனா 7 அரிய புவி தனிமங்கள் மற்றும் தொடர்புடைய காந்தங்கள் ஏற்றுமதிக்குச் சிறப்பு ஏற்றுமதி உரிமங்களைக் கட்டாயமாக்கி உள்ளது. கடந்த ஏப்ரலிலிருந்து இந்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிக உந்து சக்தி திறன் கொண்ட “நியோடிமியம்” (Neodymium) வகை காந்தம் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
தற்போது நியோடிமியம் காந்தம் இறக்குமதி குறைந்துள்ளதால் தற்காலிகமாகச் சீனாவிலேயே அசெம்பிள் செய்த மோட்டார்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் சூழல் உள்ளது. ஆனால் இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. அது மட்டும் இல்லாமல் தற்போது லித்தியம் பேட்டரி தட்டுப்பாடும் இத்துடன் சேர்ந்து இருப்பதால் மின்சார வாகன உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் நாட்டில் மின்சார வாகனங்களில் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்படலாம் என தொழில் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு இது குறித்து சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியோடிமியம் காந்தம் கிடைக்க வழிவகை செய்யவதோடு, இதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பதே தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
