கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உலகத்தையே ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றானது சீனாவில் உள்ள புகார் நகரில் முதன் முதலில் தோன்றியது. அதைத்தொடர்ந்து உலகமெங்கும் பரவி பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. குறிப்பாக அன்றாட வாழ்க்கை முறையையும், பொருளாதாரத்தையும் வெகுவாக பாதித்தது. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா தொற்று பரவல் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சரிய தொடங்கியது. உலக அளவில் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனா நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் அந்த நாடு ‘ஜீரோ கோவிட்’ திட்டத்தை அமல்படுத்தியதால், கொரோனா அதிகமாக பாதிக்கும் இடங்களில் முழு ஊரடங்கும், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
சில நாட்களுக்கு முன்பு தான் ஷாங்காய் நகரத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில், ஒரு சில பகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களும் திறக்கப்படுகின்றன. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு 75 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் பொது இடங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் அனைவரும் 72 மணி நேரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்துக்கொண்டுதான் பொதுமக்கள் வெளியே வர முடியும்.
