தமிழகத்தில் மிளகாய் மண்டலம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மாவட்டங்களி,ல் 35, 200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது.

இந்த பரப்பை 40,000 ஹெக்டராக  அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும்.

மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கவும் சேமித்து வைத்து சந்தைப்படுத்தவும் மதிப்பு கூட்டுதலுக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

நீர் ஆதாரம் இல்லாத இடங்களில் பண்ணை குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மாவட்டங்களில் ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறையுடன் ஒருங்கிணைந்து அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும்.

ஆயிரம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ள விதைகள், நாற்றுகள், இடுபொருட்கள் வழங்குவதோடு மிளகாய்தூள், மிளகாய் பேஸ்ட், மிளகாய் துகள்கள், மிளகாய் எண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க ஏதுவாக பதப்படுத்தலும், சூரிய உலர்த்திக் கூடம், தூய்மையான முறையில் காய வைத்து சந்தை படுத்திட உலர் பாய் போன்றவையும் வழங்கப்படும்.

வரும் ஆண்டில் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இது செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

பிரியா

மதுரை மல்லிக்கு ரூ.7 கோடி!

நெல் ஜெயராமன்: மானிய விலையில் விதைகள்…ரூ.50 லட்சம் ஒதுக்கீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share