நாளை அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கை எண் 309 ல் பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
ஆனால் நான்கரை ஆண்டுகள் ஆகியும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இன்று (செப்டம்பர் 10) வெளியிட்ட அறிவிப்பில், “காலவரையற்ற வேலை நிறுத்தம் மட்டுமே தமிழக அரசுக்கு அழுத்ததைக் கொடுக்கும் என்பது கடந்த கால அனுபவம். 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற கால வரையற்ற வேலை நிறுத்தத்தால் CPS திட்டத்தில்,One Time Settlement பெற்றோம். 2016 ம் ஆண்டு போன்று 2026 ம் ஆண்டு ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
காலவரையற்ற வேலை நிறுத்ததிற்கு முன் தயாரிப்பாக 11.9.25 அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தன் உணர்வுடன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். எனவே, அரசு ஊழியர், ஆசிரியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமுல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று (செப்டம்பர் 10)அரசு ஊழியர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
நாளை அரசு ஊழியர்கள் மாஸ் விடுமுறை எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருக்கும் நிலையில், வியாழக் கிழமை (செப்டம்பர் 11) அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.
அரசு ஊழியர்களின் வருகை, முன்கூட்டியே விடுமுறை எடுத்துள்ளவர்களின் விவரம், நாளை விடுமுறை எடுப்பவர்கள் விவரம் ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து கூடுதல் செயலாளர்களுக்கும், முதன்மை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
