டிஎன்பிஎஸ்சி மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் : முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

50 thousand posts will be filled by TNPSC

50 thousand posts will be filled by TNPSC

அடுத்த இரண்டு ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (பிப்ரவரி 16) “மக்களுடன் முதல்வர் ” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “18-12-2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள்.

முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.

இன்றைக்கு, எல்லா மாவட்டங்களிலும், நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறோம். கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாகவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

இது வரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

எலெக்‌ஷன் ஃப்ளாஷ்: ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவில் பொதுத்தொகுதி..சபரீசன் கொடுத்த வாக்குறுதி!

Video : ”சும்மா மெரட்டி விட்டுட்டாரு” SK 21 டைட்டில் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share