பெரியார் எனும் பெருஞ்சூரியனை திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் பகைவர் கூட்டம் திண்டாடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 52 ஆவது நினைவு தினமான இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர் பாபு, டி.ஆர்.பி. ராஜா, மு.பெ சாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!
தமிழர்கள் தலைகுனியாமல் – ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் – பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
