உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்வராகவும், திமுக தலைவராகவும் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில், “மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி, என்பது போலத்தான் என் நிலைமை. மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள், இல்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்” என்று வேதனையுடன் கூறியிருந்தார்.
அவர் ஓய்வின்றி தொடர் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றுவதற்காக நடைபெற்ற கூட்டத்திலும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சூழலில் தான் கலந்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். சுமார் 2 மணி நேர பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து இரவு ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி தொடர்பான வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டார்” என்று தெரிவித்தது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் செல்ல இருந்த பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, வரும் 30-10-2022 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், முதலமைச்சர் சார்பில், மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
