முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு இன்று (ஆகஸ்ட் 19) உடல் நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்டோருடன் நேரில் சென்று ரேணுகா தேவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் நேரில் மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பழனிவேல் தியாகராகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் டி.ஆர்.பாலுவுக்கும், டி.ஆர்.பி.ராஜாவுக்கும் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
