சீர்காழியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரியிலிருந்து கிளம்பினார்.
122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பெய்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், இன்று (நவம்பர் 14) சீர்காழிக்கு ஆய்வு மேற்கொள்ள இரவே புறப்படுகிறேன் என்று கூறினார்.
அதன்படி நேற்று இரவே புதுச்சேரி வழியாகச் சீர்காழி புறப்பட்டார். இரவு திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் அக்கார்டு ஹோட்டலில் தங்கினார்.
முதல்வரின் பயணத்தை முன்னிட்டு போலீசார் அவர் வரும் வழிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.
முதல்வர் பயணிக்கும் வழியான கடலூரிலிருந்து ஆலப்பாக்கம் புதுச்சத்திரம் வழியாகச் சிதம்பரம் செல்லும் சாலையில் டபுள் ரோடு அதாவது இரட்டைச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு பாதி மண் சாலை, பாதி தார் சாலை என்ற நிலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதனால், குறிஞ்சிப்பாடி- புவனகிரி வழியாக போகலாம். இல்லையென்றால் குறிஞ்சிப்பாடி- வடலூர் -சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடு வழியாக போகலாம் என்று போலீசார் யோசனை வழங்கியிருக்கின்றனர்.
அதன்படி, முதல்வர் செல்லும் ரூட்டில் மாற்றம் ஏற்படலாம் என்றிருந்த நிலையில், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காரணம் நேற்று இரவு பெரிய அளவில் மழை பெய்யாததாலும், சாலையில் தேங்கிருந்த மழைநீரை அதிகாரிகள் உடனே அகற்றியதாலும் திட்டமிட்ட வழியிலேயே பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை 7.45 மணிக்கு புதுச்சேரி அக்கார்டு ஹோட்டலில் இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள முதல்வர் புறப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் எல்லையான ரெட்டி சாவடி பகுதியில் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு ஒருநிமிடம் மட்டுமே தனது வாகனத்தை நிறுத்திய முதல்வர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
அதோடு, ரெட்டிசாவடி பகுதியில் தனது காருடன் , பாதுகாப்பு கான்வாய்களை தவிர, உள்ளாட்சி தலைவர்கள் என வேறு யாருடைய காரும் வரக்கூடாது என்று உத்தரவுவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் ரெட்டிசாவடி பகுதியிலேயே மற்ற கார்கள் நின்றுகொள்ள, முதல்வருடன் கான்வாய் வாகனங்கள் மட்டுமே சென்றன.
முதல்கட்டமாகக் கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதிக்கு செல்லும் முதல்வர் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
தொடர்ந்து வல்லம்படுகை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டம், உமையாள்பதி காலனி, உமையாள்பதி வேளாண் விவசாய நிலங்கள், சீர்காழி புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
பிரியா
