தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடையாறு முகத்துவார பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 26) மீண்டும் ஆய்வு மேற்கொண்டார்.
வட கிழக்கு பருவமழை கடந்த 16ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் உருவான இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்றுள்ளது. இது புயலாக வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதிகளில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் தூர்வாரும் பகுதியை இன்று காலை நேரில் ஆய்வு செய்து, அப் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின், அதே பகுதியை நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
