ஒரு ரூபாய் இட்லி பாட்டியை கவுரவித்த முதல்வர்!   

Published On:

| By Kalai

ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி கவுரவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில்  காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.        

இந்த துவக்க நிகழ்ச்சியின்போது கடந்த 30 ஆண்டுகளாக 1 ரூபாய்க்கு இட்லி விற்று வந்த ஸ்ரீ கோவை வடிவேலம் பாளையத்தை சேர்ந்த  கமலாத்தாள் பாட்டியை முதலமைச்சர் மேடையில் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி என்ற ஆவண புத்தகத்தை முதல்வர் வெளியிட கமலாத்தாள் பாட்டி அதை பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டத்தில் ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை, வரலாற்றுச் சம்பவங்களை, அரிய ஆவணங்களைத் தொகுத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. உதவிக்கு யாரும்  இல்லாமல் தனி ஆளாக 30 வருஷமாக இட்லி கடையை நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் 25 பைசாவுக்கு இட்லி விற்ற அவர், தற்போது ஒரு ரூபாயாக விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகிறார்.

சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளியவர்களின் பசியை போக்குபவராக இருக்கும் கமலாத்தாள் பாட்டி பற்றி அறிந்த மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா அவர் சேவை பற்றி பாராட்டி பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கமலாத்தாள் பாட்டிக்கு சொந்தமாக வீடும் கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு: ஏழை மக்களின் பசியாற்றும் மனித நேய தம்பதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share