பீகார் முதல்வர் யார் என்பது குறித்து சட்டப்பேரவை தேர்தலுக்கு’ பின்னரே முடிவு செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 101 இடங்களிலும் கூட்டணி கட்சியான ஜேடியூ 101 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பாஜக- ஜேடியூ கூட்டணியில் உள்ள எல்ஜேபி கட்சியின் தொகுதிகளை ஜேடியூ எடுத்துக் கொண்டதால் பெரும் சர்ச்சை வெடித்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே பீகார் முதல்வர் யார் என்பது தொடர்பாக அமித்ஷா தெரிவித்த கருத்து பாஜக கூட்டணிக்குள் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆஜ்தக் டிவி சேனலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்தான் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கிறது. நிதிஷ்குமார் தலைமையில் தேர்தல் பிரசாரம் செய்கிறோம்.
ஆனால் பீகார் புதிய முதல்வர் யார் என்பது குறித்து சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்வோம். சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த பின்னர் அனைத்து கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் கூடி அந்தந்த கட்சி சட்டசபை குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பர்; அதன் பின்னரே முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம் என கூறியுள்ளார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நிதிஷ்குமாரின் ஜேடியூவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை சந்திப்போம்; பிரசாரம் செய்வோம் என்றெல்லாம் சொல்லும் அமித்ஷா, ஏன் நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என சொல்ல மறுக்கிறார்? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
