சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்ட விழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது.
பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழாவும் நடைபெறும். இந்த வருடம் ஆனி திருமஞ்சன தரிசன விழா ஜூன் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா இன்று (ஜூன் 25) காலை 5 மணிக்கு துவங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து சாமிகள் தனித்தனியாக தேர்களில் எழுந்தருளினர்.
திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தொடர்ந்து நான்கு மாட வீதிகளிலும் தேர் வீதி உலா வந்து இன்று மாலை நிலையை வந்தடையும். தேரின் முன்பாக சிவனடியார்கள் நடனமாடி தங்களது பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். நான்கு மாட வீதிகளிலும் உள்ள வீடுகளில் ஆராதனை எடுத்து வழிபாடு செய்கின்றனர்.

இன்று மாலை தேர் நிலையை அடைந்தவுடன் தேரிலிருந்து சாமி இறக்கப்பட்டு நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் ரகசிய பூஜைகள் நடத்தப்படும். இதனை தொடர்ந்து நாளை சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்