தயாரிக்கும்போதே அற்புதமான மணம் பரவி, நாசியில் நுழைந்து, நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியாற வரவேற்கும் உணவு வகைகளில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட ரசங்களில் ஒன்று இந்த சிக்கன் புளி ரசம். சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது பசி தணிக்கும் இந்த ரசம், அப்படியே சாப்பிட்டாலும் ஆளை அசத்தும்.
என்ன தேவை?
சிக்கன் (கோழிக்கறி) – 50 கிராம் (எலும்புகளைக்கூட உபயோகிக்கலாம்)
புளி – 6 கிராம் (50 மில்லி தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி (பொடியாக நறுக்கவும்)
மீடியம் சைஸ் தக்காளி – ஒன்றில் பாதி (பொடியாக நறுக்கவும்)
தண்ணீர் – 450 மில்லி
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
பட்டை – 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கவும்)
பூண்டுப் பல் – 3 (நசுக்கிக் கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
புளியை இருபது நிமிடம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைக்கவும். கோழிக்கறியைக் கழுவி சின்னச்சின்ன கியூப்களாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, கோழிக்கறியுடன் 300 மில்லி தண்ணீர் ஊற்றி வேக விடவும். கோழிக்கறி வெந்ததும் இந்தத் தண்ணீரோடு இறக்கி ஆற வைக்கவும். மிக்ஸியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்துத் தாளித்து, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் அரைத்தவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள்தூள், கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் மற்றும் கோழிக்கறியைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். இதில் 150 மில்லி தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து நுரைத்து வரும் போது, இறக்கி மூடி வைத்து சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: ஜிஞ்சர் சிக்கன் மசாலா
