நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் ஒரு வாரத்துக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.12 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.84 ஆக சரிவடைந்து உள்ளது.
இந்த விலை சரிவு குறித்து பேசியுள்ள தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்பிரமணியம், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது குளிர்ச்சியான சீதோஷண நிலை இருப்பதால் கறிக்கோழி உற்பத்தி 35 லட்சம் கிலோவாக அதிகரித்து உள்ளது. உற்பத்தி அதிகரிப்பே விலை சரிவுக்கு முக்கிய காரணம் ஆகும்.
இதனால் வியாபாரிகள் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்து வாங்குகிறார்கள். எனவே ஒரு கிலோவுக்கு ரூ.20 வீதம் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வாரத்துக்கு ரூ.150 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக சபரிமலை சீசன் தொடங்கியதிலிருந்தே கறிக்கோழியின் விலை குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாலும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாலும் மேலும் கறிக்கோழியின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**-ராஜ்**
.,”
