செஸ் ஒலிம்பியாட்: வெற்றியைக் குவிக்கும் தமிழக வீரர்கள்!

Published On:

| By Prakash

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றனர்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஜூலை 29) நடைபெற்று வரும் முதல் சுற்றுப் போட்டியில் தமிழக வீரர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பி பிரிவில் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அதிபன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது சையத்தை வீழ்த்தினார். இவர், கருப்பு நிற காய்களுடன் விளையாடி 37ஆவது நகர்வில் வெற்றிபெற்றார்.

இதேபோல் ஓபன் பிரிவில் தெற்கு சூடான் வீரர் அஜக்கை வீழ்த்தி, கார்த்திகேயன் முரளியும், ஐக்கிய அமீரக வீரருடன் மோதிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய சி பிரிவு மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீராங்கனை நந்திதாவும் மகளிர் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த தமிழக வீராங்கனை வைஷாலியும் வெற்றி பெற்றனர்.

39வது நகர்த்தலில் தஜிகிஸ்தான் வீராங்கனை அப்ரோரோவா சப்ரினாவை வீழ்த்தி வைஷாலி வெற்றி பெற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share