சென்னையில் வடகிழக்கு பருவமழையால் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்கள் உணவு பொட்டலங்களைத் தயாரித்து இன்று (அக்டோபர் 16) வழங்கின.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் ” சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட கோயில்கள் சார்பில் இன்று (16.10.2024) உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை மண்டலங்களைச் சேர்ந்த கோயில்கள் சார்பில் இன்று காலை முதல் உணவு பொட்டலங்கள் தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் சார்பில் இன்று காலை 5,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
இப்பணிகளை சம்பந்தப்பட்ட கோயில்களின் இணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மெட்ரோ ரயில் சேவை நாளை வழக்கம் போல் இயங்கும்!
வேலைநிறுத்தம் வாபஸ்… ஆனால்! சாம்சங் நிறுவனத்திற்கு சிஐடியு கண்டிஷன்!