வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா எம்.பி. மீது ஜூலை 23-ந் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறது. நில அபகரிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது ஜூலை 24-ந் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறது. Chennai Special Court Issues Key Order in Cases Involving Minister Ma. Subramanian and A. Raja
2015-ம் ஆண்டு ஆ.ராசா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. வருமானத்துக்கு அதிகமாக ரூ 5.53 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் எம்.பி- எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகை நகலும் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டோருக்கு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் ஜூலை 23-ந் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட இருப்பதால் ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல போலி ஆவணங்கள் மூலம் சிட்கோ நிலத்தை அபகரித்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் வரும் 24-ந் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை பதிவு செய்கிறது.