கொரோனா சென்னையில் தடம் பதித்து தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை இல்லாத அளவு பொதுமக்களின் அதிகபட்ச ஒத்துழைப்போடு ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் “கொரோனாவை எதிர்த்துக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், விமர்சனம் செய்வதற்கு முன் யோசியுங்கள்” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மின்னம்பலத்தில் நாம் வெளியிட்ட செய்தியில் சென்னையில் ஒவ்வொரு வீட்டுக்கு நான்கு சுகாதாரப் பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதை எழுதியிருந்தோம். தினந்தோறும் ஒருவர் வெப்ப சோதனையில் ஈடுபடுகிறார், மூன்று நாட்கள் தொடர்ந்து வெப்ப நிலை அதிகமாக இருப்பதை உணர்ந்தால் உடனடியாக அவர்களின் குடும்பம் தனிமைப்படுத்தப்படுகிறது. அப்போது அந்த குடும்பத்துக்கு வேண்டிய பொருட்களை இன்னொரு நபர் தினமும் வந்து வாங்கிக் கொடுக்கிறார். மூன்றாவது நபர் தினந்தோறும் வந்து வீடுகளுக்கு கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்துகிறார். நான்காவது நபர் இந்த மூன்று நபர்களையும் கண்காணித்து வருகிறார். இப்படியாக சென்னையில் மைக்ரோ மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மின்னம்பலத்தின் [டிஜிட்டல் திண்ணை](https://minnambalam.com/politics/2020/06/21/45/Next-goverment-tn-cm-Edapady’s-Micro-Plan) பகுதியில் எழுதியிருந்தோம்.
இந்நிலையில் இதை உறுதிப்படுத்துகிற வகையில், சென்னை மாநகராட்சி மீது கொரோனா தடுப்புப் பணியில் பல்வேறு விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான கோரிக்கைகளையும் வைத்து வந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம், இந்த மைக்ரோ மேலாண்மைத் திட்டத்தைப் பாராட்டியிருக்கிறது.
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், இன்று (ஜூன் 21) சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், சுகாதாரத்துறை செயலாளருக்கும் ஒரு செய்தியை அனுப்பி வைத்து அதை தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.
“ஐயா, மண்டலம் 14 இல் சுகாதாரத் தொழிலாளர் பதிவு: ………………. என்ற பெயரிடப்பட்ட சென்னை மாநகராட்சியின் தற்காலிக சுகாதார பணியாளர், எங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க தினமும் ஈ.சி.ஆர். (வார்டு 183, மண்டலம் 14 இல்) எங்கள் பகுதிக்கு வருகை தருகிறார். அவர் தனது கடமையை செம்மையாக நிறைவேற்ற உன்னிப்பாக முயற்சி செய்கிறார். அதை சரியாக பதிவு செய்கிறார். ஒவ்வொரு சுகாதார ஊழியரும் இதுபோன்ற ஒரு வேலையைச் செய்தால், கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவில் உதவும். அந்தப் பெண்ணைப் போன்ற ஒரு நேர்மையான தொழிலாளி அங்கீகரிக்கப்பட வேண்டும். பாராட்டப்பட வேண்டும். எனவே இந்த செய்தியை தங்களுக்கு அனுப்புகிறேன்.
இந்த செய்தியை சம்பந்தப்பட்ட மண்டலத்தின் (மண்டலம் 14, வார்டு 183) சுகாதார பொறுப்பாளருக்கு அனுப்பி வையுங்கள். இதனால் அவர் கொரோனா கட்டுப்பாட்டுக்கான மண்டல, வார்டு பொறுப்பாளர்கள் மூலம் பாராட்டப்படுவார். அவரது பணிக்கான பாராட்டும், அங்கீகாரமும் தேவை” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் செந்தில் ஆறுமுகம்.
சென்னை மாநகராட்சியின் தற்காலிகப் பணியாளரான அந்தப்பெண் யாரென்று தெரியாது. ஆனால்,. தினந்தோறும் எங்கள் பகுதியின் வீட்டுக்கு வந்து எங்களின் உடல்நலம் விசாரித்து, ஒவ்வொருவராக உடல்வெப்பநிலை சோதித்து, கவனமாக நோட்டில் குறித்து, தனது பணியை பொறுப்பாகச் செய்யும் அவரின் அர்ப்பணிப்பான பணியைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ள செந்தில் ஆறுமுகம், இந்தப் பதிவில் அந்தப் பெண் பணியாளரின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை இதுபோன்ற தற்காலிக பணியாளர்களால் கொரோனா தாக்குதலில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது இதுபோன்ற பாராட்டுப்பதிவுகள். கடமை உணர்வில் தளராத அந்த சேவைப் பெண்ணுக்கும், இவரைப் போன்ற ஒவ்வொரு பணியாளருக்கும் சல்யூட் வைப்போம். கொரோனாவை வென்றிட சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்போம்!
**-ஆரா**
�,