மத்திய அரசின் ரோஜ்கார் மேளாவில் சென்னையில் வழங்கப்பட்ட நிகழ்வில், பேனர் இந்தியில் வைக்கப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் (Mission Mode Recruitment) மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளாவை (வேலைவாய்ப்பு கண்காட்சி) பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார்.
நாட்டின் பல்வேறு நகரங்களில், ஒரே நேரத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 75,226 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்ததைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு சார்பில் 75 ஆயிரம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் ரோஜ்கார் மேளா இன்று (நவம்பர் 22) நாடு முழுவதும் நடைபெற்றது.
இதில், 2வது கட்டமாக, சுமார் 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி உரையாற்றினார்.
குஜராத் மற்றும் இமாச்சல் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அங்கு இந்த பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
அந்த இரு மாநிலங்களைத் தவிர மற்ற 45 இடங்களில் இந்த பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தமிழகத்தில், சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த நிகழ்வில் இது சம்பந்தமான விளம்பர பேனர் தமிழ் மொழியில் இல்லாமல், இந்தியில் இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை வாரணாசியில் தொடங்கி, அங்கு தமிழைப் பற்றிப் பெருமையாகப் பேசிய மத்திய அரசு, சென்னையில் இன்று ரோஜ்கார் மேளாவில் பேனரை இந்தியில் வைத்திருந்ததுதான் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும், தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இந்தி பேனர் வைக்கப்பட்டது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜெ.பிரகாஷ்

Comments are closed.