நகராட்சியில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று (ஜூன் 18) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. சாலையில் சில இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்திருந்தன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் திருவாரூரில் இருந்து கொண்டு கள நிலவரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மழையை முன்னிட்டு 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்கிறதா என்று கண்காணித்து வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையைப் பொறுத்தவரை நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் செயலாளர் களத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
சென்னையில் உள்ள 22 சுரங்க பாதைகளில் 1 சுரங்க பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை சரிப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மழையின் காரணமாக ஆறு இடங்களில் 38 மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் உயிர்சேதமோ பொருள் சேதமோ இல்லை. சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் கண்காணிப்பு அறையில் அதிகாரிகள் அனைத்தையும் கண்காணித்து வருகின்றனர். வருவாய் துறையின் கட்டுப்பாட்டு அறையிலும் மக்களிடம் இருந்து புகார்களைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நகராட்சியில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். கடந்த வாரமே முதலமைச்சர் தென்மேற்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளார்.
கடலோர மாவட்டங்களை கவனிக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயிர்சேதம் எதுவும் இல்லாத அளவிற்கு மழையை நாம் எதிர்கொள்வோம். சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
