பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநரிடம் விளக்கம் அளித்த சென்னை கமிஷனர்!

Published On:

| By Monisha

chennai police commissioner meet governer rn ravi

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்டோபர் 26) விளக்கமளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒன்றாம் எண் கேட் முன்பு நேற்று மாலை 4 மணியளவில் சரித்திர பதிவேடு ரவுடியான கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரவுடி வினோத்தை கைது செய்து கிண்டி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு ஆளுநர் ஒப்புதல் தராததால் தான் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி வினோத் வாக்குமூலம் கொடுத்தார்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்திலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்திற்கு நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, துணை ஆணையர் ஆர்.பொன் கார்த்திக் குமார் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விளக்கம் அளித்திருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

குடியரசுத் தலைவர் சென்னை வருகை: முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share