மேல் வரி குறைப்பு: குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவிப்பு!

Published On:

| By Monisha

metro water and sewerage board

சென்னை மக்கள் காலதாமதமாக செலுத்தும் மேல் வரியை குறைத்து குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று (ஜூன் 24) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25% என்ற விகிதத்தில் மேல் வரி (Surcharge) வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.25% இருந்து 1% ஜூலை 1 முதல் குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வரை) உள்ள நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், நுகர்வோர்கள் சென்னைக் குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணையதளம் வாயிலாக www.cmwssb.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.

மேலும், பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் வரையோலை, காசோலை மற்றும் ரொக்கமாகவும், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் வரையோலையாகவும் செலுத்தலாம்.

மேலும், UPI, QR குறியீடு மற்றும் PoS போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்.

எனவே, நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்தி வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

பாயும் ஒளி நீ எனக்கு – விமர்சனம்!

எடப்பாடி ஹெல்த்- போன் போட்டு விசாரித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share