கிராமிய நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடும் மெட்ரோ!

Published On:

| By Monisha

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால் சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிராமிய கலை நிகழ்ச்சிகள்

75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து கிராமிய நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடத்துவதற்கு மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி சென்ட்ரல், ஆகஸ்ட் 13-ம் தேதி விம்கோ நகர், ஆகஸ்ட் 14-ம் தேதி கிண்டி, ஆகஸ்ட் 15-ம் தேதி அசோக் நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெட்ரோ நிர்வாகத்தின் இந்த முயற்சி சுதந்திர தினத்தை மட்டுமல்லாமல் தமிழர்களின் கலைகளை சிறப்பித்து பெருமைபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

தமிழகத்தின் மற்ற ஏற்பாடுகள்

திருநெல்வேலி மாவட்டம், பழையபேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில், தேசிய மாணவர் படை பொறுப்பாசிரியர் சுசீலா தலைமையில் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு காந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்து முடிவடைந்தது.

கோயம்புத்தூர் நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவர்கள் சிறுதானியங்கள் கொண்டு 250 கிலோ கொண்ட, 76 சதுர அடியில் கேக் தயாரித்து அசத்தியுள்ளனர். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதனை செய்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களின் இந்த செயலை பாராட்டி அப்துல் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

திருச்சி மாநகராட்சில் சலுகை கட்டணத்தில் கொடிகளை விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு தோறும் தேசிய கொடியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக மகளிர் சுய உதவி குழு மூலம் தேசிய கொடிகள் தயாரித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சியில் 2.75 வீடுகள் உள்ளன. எனவே 2 லட்சம் கொடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றுக்கு ஒன்றரை அளவுள்ள ஒரு கொடி 21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

75 அயிரம் பனைவிதைகள்

புதுச்சேரி வனத்துறை மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு, பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத்தின் உதவியோடு 75 ஆயிரம் பனைவிதைகளை நடும் விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share