என்.எல்.சி முன் போராட அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!

Published On:

| By Monisha

not permitted protest before NLC

என்.எல்.சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிர்வாகம் 2வது சுரங்கத்தில் இருந்து பரவனாற்றுக்கு உபரி நீரை வெளியேற்றுவதற்காக விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. நெற்கதிர் நிறைந்த நிலங்களில் ஜே.சி.பி வாகனங்கள் மூலம் பயிர்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதே சமயம் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதி முதல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இன்று 9வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே போராட்டக்காரர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று நேற்று கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்.எல்.சி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இந்நிலையில், என்.எல்.சி முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என என்.எல்.சி தரப்பில்  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தொழிலாளர்கள் தரப்பில், கடந்த 8 தினங்களாக அமைதியான முறையில்  போராட்டம் நடைபெற்று வருகிறது என்று வாதிடப்பட்டது.

என்.எல்.சி தரப்பில், போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாமல் கார்ப்பரேட் அலுவலகம் எனும் தலைமை அலுவலகத்தின் முன்பே முற்றுகை போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அனுமதிக்கப்படாத இடத்தில், அதுவும் என்.எல்.சி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது.

போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கடலூர் காவல்துறை எஸ்.பி நிர்ணயிக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து என்.எல்.சி அலுவலகம் முன் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மோனிஷா

அஜயன் பாலா இயக்கும் மனதைத் தொடும் காதல் கதை!

“தமிழகத்தை பின்னடைவுக்கு தள்ளிய திமுக”: எடப்பாடி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share