அதிமுக பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது. Chennai hc ordered to ops
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுக தலைமை பதவிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரிமைக்கோரி போராடி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக கட்சியின் சின்னம், கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதால், அவரும், அவரது ஆதரவாளர்களும் அதிமுக அதிமுக கட்சியின் சின்னம், கொடி, லெட்டர்பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோதெல்லாம், பன்னீர் செல்வம் தரப்பில் தொடந்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
அவகாசம் கேட்டதால் நீதிபதி அதிருப்தி!
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது. இதுவரை பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.
இன்னும் நான்கைந்து மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் அதே பதவியை பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார். இது பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி வருகிறது.
எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வாதிட்டார்.
பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜரான ராஜலட்சுமி, “உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தற்போது எண்ணிடப்பட்டுவிட்டது. விரைவில் பட்டியலிடப்பட உள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதனைக்கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி சதீஷ்குமார், ”எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே காரணத்தை கூறுவீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பன்னீரின் செயல்களால் அதிமுக சீர்குலைகிறது!
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை அளித்த பேட்டியில், “அதிமுகவிற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்து, அதனை நிலுவையில் இருக்கும்படி செய்துகொண்டு இருக்கும் ஓபிஎஸ்-ன் செயல்களால் அதிமுக நடவடிக்கைகள் சீர்குலைகிறது.
அதிமுக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றம் கிளை கூட, முத்துராம லிங்க தேவருக்கு அணிவிக்க கூடிய பொன் கவசத்தை கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தான் ஒப்படைத்தார்கள். ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்துக்கு எதிரானது. இதனை குறித்து அவர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்த வழக்கில் இன்று வரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை. அவர்கள் அவகாசம் கேட்டு வந்த நிலையில், இன்று நீதிபதியே அதிருப்தி அடைந்து, “தொடர்ந்து இவ்வாறு அவகாசம் கேட்பது எப்படி முறையாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இனிமேல் அதிமுகவின் கொடி, பெயர், சின்னம், லெட்டர்பேட் போன்றவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது” என்று இன்பதுரை தெரிவித்துள்ளார். Chennai hc ordered to ops
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வன்னியர் சங்க கட்டட நிலத்தை மீட்கும் உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்
மழைக்கால மின் விபத்து… தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?: TANGEDCO எச்சரிக்கை!