நடிகர் ரவிமோகன் – ஆர்த்தி இருதரப்பும் தங்களுக்கிடையேயுள்ள பிரச்சனை குறித்து இனி எந்த அறிக்கையும் வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மே 23) உத்தரவு பிறப்பித்துள்ளது. chennai hc order to ravimohan aarti to stop defame
தனது 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார். தொடர்ந்து சென்னை குடும்பநல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆர்த்தி – ரவிமோகன் இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தன்னைப் பற்றிஅவதூறு கருத்துகள் வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாயாருக்கு தடைவிதிக்க வேண்டுமெனக் கோரி நடிகர் ரவிமோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ’இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி இனி அறிக்கைகளை வெளியிட மாட்டோம்’ என உறுதியளித்தனர்.
மேலும் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடவும், விவாதிக்கம் தடைக்கோரினர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ரவிமோகன் – ஆர்த்தி இருதரப்பும் தங்களுக்கிடையேயுள்ள பிரச்சனை குறித்து இனி எந்த அறிக்கையும் வெளியிட கூடாது என்றும், இதுவரை சமூகவலைதளங்களில் வெளியிட்ட அறிக்கைகளை நீக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக ‘விவாகரத்துக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் ரவிமோகன் வழங்கக்கோரி உத்தர பிறப்பிக்க வேண்டும்’ என ஆர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.