சென்னை பரங்கி மலையில் வன்னியர் சங்க கட்டடம் செயல்பட்டு வந்த 41,952 சதுர அடி நிலத்தை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று(நவம்பர் 7) ரத்து செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.
அதையும் மீறி அங்கு வன்னியர் சங்கக் கட்டடம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அங்குள்ள கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
எனவே நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தனர்.
வழக்கை அப்போது விசாரித்த நீதிபதிகள், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனக்கூறி, கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு விசாரணை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று வந்தது.
அப்போது, ”சம்பந்தப்பட்ட நிலத்துக்கு கண்டோன்மெண்ட், தமிழ்நாடு அரசு மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம் என மூன்று தரப்பும் உரிமை கோருகிறது.
எனவே நிலத்தை மீட்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
மேலும், கோயிலுக்கு சொந்தமானது என்ற கீழமை நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2025 சாம்பியன்ஸ் ட்ரோபியில் ஆப்கான்… உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லுமா?
கமல் படத்திற்கு டிரெண்டிங் டைட்டில்: ’தக் லைஃப்’ அர்த்தம் என்ன?
