தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே போதை கலாச்சாரமாக கஞ்சா, போதை மாத்திரை என நாளுக்கு நாள் புதிய புதிய போதைப் பழக்க வழக்கங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
அந்தவகையில், சமீபகாலமாக சென்னையில் கஞ்சா சாக்லேட் பழக்கம் பரவலாகி வருகிறது.
மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து இந்த கஞ்சா சாக்லேட் விற்பனை நடக்கிறது. சராசரியாக ஒரு சாக்லேட்டை ரூ.100-க்கு விற்று வருகின்றனர்.
இதன் பின்னணியில் மிகப்பெரிய டீம் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் சென்னை மாம்பலம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர்,
அவரிடமிருந்து 8கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“சென்னை பெருநகரில் போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும்,
விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில்,
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மாம்பலம் (R-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் துறையினர்,
நேற்று(ஜனவரி 19) காலை, மாம்பலம், வி.என்.ரோட்டில் உள்ள பள்ளி அருகே கண்காணித்தபோது, அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து போதை தரும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரன் யாதவ் (43) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன் யாதவ் ராயப்பேட்டை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் தனது மாமா அமுல்குமார் யாதவ் என்பவருடன் சேர்ந்து பிகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வரவழைத்து சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள அமுல்குமார் யாதவ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சுரேந்திரன் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
போலீஸார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்