சென்னை: வீட்டு வேலை செய்த சிறுமி கொலை… ஆறு பேர் கைது!

Published On:

| By Selvam

சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்து வந்த 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆறு பேரை அமைந்தகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,  “சென்னை, அமைந்தகரை மேத்தா நகர், ஈடன் காஸ்டல்  அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் சர்புதீன் என்பவர் 01.11.2024 அன்று K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், இறந்து போனவர் 15 வயது சிறுமி என்பதும் அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் என்பதும், சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 2023-ம் ஆண்டு முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும், போலீசாரின் விசாரணையில் இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்கண்ட வீட்டில் வசித்த முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா (எ) நாசியா, நண்பர்களான லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கியதில் அவர் இறந்துள்ளது தெரியவந்தது. அதன் பேரில் மேற்கண்ட சந்தேக மரணம் வழக்கானது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு எதிரிகள் நிவேதா (எ) நாசியா (வயது 30), அவரது கணவர் முகமது நிஷாத் (வயது 36), லோகேஷ் (வயது 26), அவரது மனைவி ஜெயசக்தி (வயது 24), கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 40)

மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம் (வயது 39) ஆகியோர் 02.11.2024 அன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு!

அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? – எடப்பாடி சொன்ன விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share