நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். Chennai Corporation Commissioner apologizes
சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரம் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி ஆணையர் செயல்படுத்தவில்லை என வழக்கறிஞரும் முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உத்தரவை அமல்படுத்தாததற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஆணையரின் ஊதியத்திலிருந்து இந்த அபராத தொகையை பிடித்தம் செய்து அதை புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு மீதுதான் தவறு” என்று கூறினார் .
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தாலும் அதை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் ஆணையராகவே இருக்க தகுதி இல்லாதவர். நீதிமன்றத்தை விட தான் மேலானவர் என ஆணையர் நினைக்கிறாரா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று (ஜூலை 9) சென்னை மாநகராட்சி ஆணையர் ஏன் ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, உரிய பிரமாண பத்திரத்துடன் ஜூலை 10ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று (ஜூலை 10) நேரில் ஆஜரானார்.
அப்போது நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை. நடந்த தவறுக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு திரும்ப பெற்றுக் கொண்டது. Chennai Corporation Commissioner apologizes
