பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. chennai corporation alert dont pay parking fee
சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான கட்டணங்கள் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பில் இருந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ”பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்று 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.
இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
