ஆளுநர் உரையைக் கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 10) காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில பத்திகளை வாசிக்கவில்லை.
இதன்காரணமாக, ஆளுநர் வாசித்த உரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே, ஆளுநர் ரவி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் சட்டமன்ற வெளிநடப்பு நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், #GetoutRNRavi என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இந்தநிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தமிழக சட்டமன்றத்தில் அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்கவில்லை என்றும் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆளுநருக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செல்வம்
Comments are closed.