மகாவிஷ்ணுவுக்காக வாட்ஸ் அப் க்ரூப்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்!

Published On:

| By Kavi

மகாவிஷ்ணு விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ்  இன்று (செப்டம்பர் 17) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி, ஆசிரியர் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்.

அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்திய சைதாப்பேட்டை போலீசார் மீண்டும் அவரை புழல்  சிறையில் அடைத்தனர்.

அவரிடம் அரசு பள்ளிகளில் சொற்பொழிவாற்ற உங்களை அழைத்தது யார் என்று கேட்டபோது சிஇஓ தான் என்று வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் “அமைச்சர் அன்பில் மகேஷ் நல்ல மனிதர் – மகாவிஷ்ணு வாக்குமூலம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மேலும், மொத்தம் 13 அரசு பள்ளிகளில் உரையாற்ற மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை, ஜெகே பவுண்டேஷனுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்துள்ளார்.

இதுகுறித்தும் மின்னம்பலத்தில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி “13 பள்ளிகளில் பேச ஏற்பாடு… மகாவிஷ்ணுவுக்காக கல்வித் துறை அமைத்த வாட்ஸ் அப் க்ரூப்! -பகீர் ஆதாரங்கள்!” என்ற தலைப்பிலான டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன் எதிரொலியாக தற்போது சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது,  “மகாவிஷ்ணு விவகாரத்தில் இரு தலைமை ஆசிரியர்கள் மீது உடனடி இடமாற்ற நடவடிக்கை எடுத்ததுதான் இப்போது இந்த அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. தலைமை ஆசிரியர்கள், தங்கள் மீது தவறு இல்லை என்றும் சி.இ.ஓ. உத்தரவின்பேரில்தான் செயல்பட்டோம் என்று துறை செயலாளர் வரை சென்று சொல்லிவிட்டனர்.

இதற்கிடையே இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், மின்னம்பலத்தில் வெளியான வாட்ஸ் அப் க்ரூப் பற்றிய செய்தியைப் பார்த்து ஷாக் ஆகியிருக்கிறார்.   ‘நமக்கு தெரியாத விஷயங்கள் கூட ஊடகங்களுக்கு தெரிந்திருக்கிறது. அரசு பள்ளிகளில் சொற்பொழிவாற்ற அனுமதி கொடுக்க வாட்ஸ் அப் குரூப் அமைத்தது, வீடியோ கால் பேசியதை எல்லாம்  மின்னம்பலத்தில் ஆதாரத்தோடு செய்தி வந்துள்ளது’ என கூறி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

தற்போது சிஇஓ மார்ஸ் தஞ்சை சரபோஜி மன்னர்  நூலகத் துறை துணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு அடுத்த வாரம் இணை இயக்குநராக பதவி உயர் வழங்கப்படுவதற்கு இந்த நடவடிக்கை தடையாக இருக்காது” என்றும் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வணங்காமுடி

கெஜ்ரிவால் ராஜினாமா… ஆட்சியமைக்க உரிமை கோரினார் அதிஷி

“நம்முடைய டார்கெட் 2026 எலெக்‌ஷன்” – பவள விழாவில் ஸ்டாலின் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share