மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்னும் சில இடங்களில் மின் வினியோகம் வழங்கப்படவில்லை. வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் தமிழ்நாடு அரசு நாளையும் (டிசம்பர் 7) விடுமுறை அறிவித்துள்ளது.
அதுபோன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.
இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா