கழுத்தை நெரித்த கடன்: வங்கி அதிகாரியின் விபரீத முடிவு!

Published On:

| By Balaji

சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் கடன் தொல்லையால் குடும்பத்தினரைக் கொன்று தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை போரூர், டிஎல்எஃப்-ல் செயல்பட்டு வரும் பார்க்லேஸ் என்ற தனியார் வங்கியில் உதவி துணைத் தலைவராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன்(42). இவரது மனைவி தாரா (36). இவர்களுக்கு 10 வயதில் தாரன் என்ற மகனும், ஒரு வயதில் தாகன் என்ற மகனும் இருந்தனர். மணிகண்டனுக்கு சொந்த ஊர் கோவை. சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த இவர் குடும்பத்துடன் பெருங்குடி, பெரியார் சாலை பகுதியில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்தார்.

ADVERTISEMENT

கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இன்று நீண்ட நேரமாக வெளியே வராத நிலையில், அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் துரைபாக்கம்காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து காவல்துறையினர் நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்காததால், உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நான்கு பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்ததில், நேற்று (01.01.21) இரவு தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு, தனது இரண்டு மகன்களையும் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, கிச்சனில் உள்ள கொக்கியில் தானும் வேஷ்டியால் தூக்கு மாட்டி மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது. பிற்பகல் 2 மணியளவில் 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

“முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் கடன் வாங்கி, அதனை திருப்பி கொடுக்க முடியாமல், கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நெருக்கடியில் தவித்து வந்திருக்கிறார். இதனால் மனைவிக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டிருக்கிறது. அவர் நண்பர்களிடம் சுமார் ஒரு கோடி வரை கடன் பெற்றிருக்கிறார். இதுமட்டுமின்றி ட்ரீம் 11 கேம், ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் போன்றவற்றிலும் மணிகண்டன் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார்” என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அவருக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share