சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட உள்ள உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 19) தொடங்கி வைத்தார்.
சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில், பல்வேறு அரசுத் துறைகளின் தலைமையகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் வர்த்தக மையங்கள்,
வணிக வளாகங்கள், வங்கித் தலைமையகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால் இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ தூரத்தை கடக்க சராசரியாக 25 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றது.
இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அணிவகுத்து அதிகநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.
இதிலும் குறிப்பாக நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு ஆகியவற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்தநிலையில், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவில் 4 வழி உயர்மட்டசாலை ரூ.621 கோடி செலவில் அமைக்கப்படும் என்று 2022-23 நெடுஞ்சாலைத் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.
மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம்.
மேலும் கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இப்பாலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!