சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் வீடுகளுக்கு திரும்பிய போது மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில், தமிழக அரசு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (அக்டோபர் 6) குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய – மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.
குடிநீர்,உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
ஆனால், ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது. நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை அப்டேட்!
கடும் கூட்டநெரிசல்: வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனா இது… மும்பை ஸ்டேஷனுக்கே டஃப் கொடுக்கும் போலயே!