சென்னை விமான நிலையத்தில் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாவது உள்நாட்டு முனையம், அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த வெளிநாட்டு முனையம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
இதில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து முழு அளவில் விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதையடுத்து விமான நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்ட பழைய சர்வதேச விமான முனையம் மூடப்பட்டது.
தற்போது சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இரண்டாவது தளத்தில் புறப்பாடு பகுதியும் கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்பட்டு வருகிறது.
உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பழைய சர்வதேச வெளிநாட்டு முனையத்தை, இரண்டாவது உள்நாட்டு முனையமாக மாற்ற விமான நிலைய இயக்குநரகம் முடிவு செய்தது.
அதன்படி பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதில் இருந்த குடியுரிமை பரிசோதனை கவுண்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் கன்வேயர் பெல்ட் அங்கு மாற்றப்பட்டு வருகிறது.
இது மட்டுமின்றி முனையத்தை சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது உள்நாட்டு முனையத்தின் பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்தில் (அக்டோபர்) திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள விமான நிலைய அதிகாரிகள்,
“சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும்.
மேலும் பயணிகளும் வெகு நேரம் காத்திருக்காமல் எந்த முனையத்தில், எந்த விமானம் இயக்கப்படுகிறது என்று எளிதாக கண்டுபிடித்து செல்லலாம்.
பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்துக்கு எளிதில் செல்லலாம்.
தற்போது டி-1 முனையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அடாஸ்கா போன்ற விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும்.
டி-4 முனையத்தில் இருந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
மராத்தா இட ஒதுக்கீடு… போராட்டத்தில் வெடித்த கலவரம்: மன்னிப்பு கேட்ட துணை முதல்வர்