சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. மெட்ரோ ரயில் போல, மின்சார ரயிலிலும் குளு குளு ஏசி வசதி செய்து தரப்பட வேண்டும் என்று பயணிகள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். Chennai ac train details
இந்தநிலையில், 12 பெட்டிகளை கொண்ட முதல் ஏசி மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இன்று (ஏப்ரல் 19) இயக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணம் செய்தனர்.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45, இரவு 7.45 ஆகிய நேரங்களில் புறப்படும் இந்த ஏசி ரயிலானது தாம்பரத்திற்கு காலை 7.42, மாலை 4.26, இரவு 8.30 ஆகிய நேரங்களில் வருகை தரும். அங்கிருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு காலை 8.35, மாலை 5.25 மணிக்கு செல்கிறது. கடற்கரையில் இருந்து இரவு 7.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணி, மாலை 5.45-க்கு புறப்படும் மின்சார ரயில், தாம்பரத்திற்கு காலை 9.41, மாலை 6.26 மணிக்கு வருகிறது. அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 10.30, இரவு 7.15 மணிக்கு செல்கிறது. ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவை இயக்கப்படாது.

மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ஏசி ரயிலானது இயக்கப்படுகிறது. 1,320 இருக்கைகள் உள்ளன. சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு நிமிடம் மட்டுமே ரயில் நின்று செல்லும். தானியங்கி கதவுகள் மூடுவதற்கு முன்பாக, பயணிகள் இறங்கிவிட வேண்டும்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரையிலான ஏசி ரயில்களில் ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை ரூ.35, கிண்டி, மாம்பலம் ரூ.60, தாம்பரம் ரூ.85, செங்கல்பட்டு ரூ.105 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Chennai ac train details