நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து அவர், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் காரில் பயணம் செய்த போது நிலை தடுமாறியதில் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
அப்போது யாஷிகாவிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 21ம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் ஆஜராகாத நிலையில் வரும் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போதும் ஆஜராகாவிட்டால் அவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
’ட்ரோல் மெட்டீரியல்’ மந்தனா?: மீண்டும் புஷ்வானமான ஆர்.சி.பியின் கனவு!