செங்கல்பட்டு – பரனூர் இடையே சரக்கு ரயில் தடம் புரண்டதால் புறநகர் மின்சார ரயில் சேவை இன்று (டிசம்பர் 11) தாமதமாக இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயிலானது முக்கியமான போக்குவரத்து சேவையாக அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், இரும்பு மூலக்கூறுகள், உலோக தகடுகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு விழுப்புரத்திலிருந்து சென்னை தண்டையார்பேட்டை துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பரனூர் அருகே இன்று அதிகாலை தண்டவாளத்தில் தடம் புரண்டது. இதனால் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் விபத்துக்குள்ளானது. மேலும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமானது.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் செங்கல்பட்டு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரயில் விபத்தால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்படுகின்றது.
மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
