ஒரு நல்ல ஆசிரியரின் பண்புகள்!

Published On:

| By christopher

Characteristics of a good teacher - sadhguru

சத்குரு

ஒரு நல்ல ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் மற்றும் குழந்தையை உருவாக்குவதில் ஆசிரியருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்து இதோ உங்கள் பார்வையில்.

ADVERTISEMENT

ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம்

இன்றைக்கு ஆசிரியர்கள் தினம். ஏனெனில், இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், ஆரம்ப நாட்களில் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இருக்க நேர்ந்த டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இது. நம்முடைய ஜனாதிபதிகளில் ஒருவர், உண்மையில் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார் என்பது, இந்த தேசத்தின் ஆசிரியர்களுக்கு அற்புதமானதொரு பாராட்டுப் பத்திரம்.

ADVERTISEMENT

ஆசிரியர் கடவுள் போன்றவர் என்ற பொருளில், “ஆச்சார்ய தேவோ பவா”, என்று கூறுமளவுக்கு, ஒருவரது வாழ்வின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக, இந்தியக் கலாச்சாரத்தில் ஆசிரியரை நாம் எப்போதும் அங்கீகரித்து வந்துள்ளோம். ஏனெனில், பொதுவாக, வளரும் குழந்தைகள் தங்களது பெற்றோரிடத்தில் இருப்பதைக் காட்டிலும், அவர்களது ஆசிரியர்களிடத்தில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது ஏனென்றால், அவர்களைவிட வேறொருவர் அவர்களது குழந்தைகள் மீது மேலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்கின்றனர்.

ஒரு ஆசிரியரின் முக்கியத்துவம்

ADVERTISEMENT

இன்றைய தலைமுறையில் ஒரு ஆசிரியருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று மக்கள் கருதுகின்றனர், ஏனென்றால் ஒரு ஆசிரியர் சொல்லக்கூடிய அனைத்தையும் இணையதளம் கூறமுடியும். ஆனால் ஒரு தனிமனிதனின் உருவாக்கத்தில், ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தின் உருவாக்கத்தில், ஒரு ஆசிரியருக்கு முக்கியத்துவமான ஒரு பங்கு இருக்கிறது. உண்மையில், தகவல் வெளிப்படுத்தும் சுமை இன்றைக்கு ஆசிரியர்களிடமிருந்து நீக்கப்பட்டுள்ள காரணத்தால், அவர்களது முக்கியத்துவம் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவே நான் எண்ணுகிறேன்.

ஒரு ஆசிரியருக்கு முக்கியமாக, மாணவரை ஊக்குவித்து ஒரு மனிதராக மேம்படுத்துவதுதான் எப்போதுமே பிரதானமான பணியாக இருக்கிறது. மேலும், ஓர் ஆசிரியர் என்பவர் உங்களுக்கு கடகடவென்று தகவல் வழங்கும் ஒரு ஒலிப்பதிவுப் பெட்டியல்ல. ஒரு குறிப்பிட்ட விதமாக இருப்பதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம், ஒரு மாணவரை உருவாக்கவிருப்பவரே ஆசிரியர்.

பெரும்பாலும் பல குழந்தைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட பாடத்தை எந்த ஆசிரியர் கற்றுத் தருகிறார் என்பதைப் பொறுத்து அவர்கள் அந்தப் பாடத்தை விரும்புகிறார்களா அல்லது வெறுக்கிறார்களா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மாணவர் ஆசிரியருடன் ஈடுபாடு காணும் நிலையில், ஆசிரியரும் போதிய ஊக்கமளிப்பவராக இருந்தால், உடன் அந்தப் பாடம் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. திறனை மேம்படுத்தும் செயல்முறையிலும் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் குழந்தையின் ஆர்வத்தை வளர்ப்பதிலும் ஒரு ஆசிரியர் நிச்சயமாக பெரும்பங்காற்றுகிறார்.

ஒரு நல்ல ஆசிரியரின் பண்புகள்

எந்த ஒரு தேசத்தையும், நாம் தகுதி வாய்ந்ததாக உருவாக்க வேண்டும் என்றால், உயரிய திறன் பொருந்தியவர்கள் பள்ளி ஆசிரியப் பணிக்குச் செல்ல வேண்டும். அந்த முதல் 15 வருடங்களில் எந்த விதமான தாக்கத்திற்கு குழந்தை ஆட்படுகிறது என்பது அவர்களது வாழ்க்கை குறித்த பல விஷயங்களையும் தீர்மானிக்கிறது. ஒரு ஆசிரியரின் உருவாக்கத்தில் மனங்களின் சிறந்த பண்புகள், மேலான நேர்மை மற்றும் மிகுந்த உயிரோட்டம் ததும்பும் ஊக்கத்திறன் போன்றவை இடம்பெற வேண்டும்.

ஆனால் இன்று, பல பேர் வேறு எந்தப் பணிக்கும் செல்லமுடியாத ஒரே காரணத்தினால் பள்ளி ஆசிரியர்களாகும் அளவுக்கான ஒரு பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். இது எல்லா ஆசிரியர்களுக்கும் உண்மையல்ல என்றாலும், பல ஆசிரியர்களுக்கு நிகழ்கிறது. இது மாறவேண்டும். இது மாறவில்லை என்றால் எந்த வகையிலும் தகுதியான ஒரு சமூகத்தை நாம் கட்டமைக்கமாட்டோம். மிகவும் தரம் தாழ்ந்த மனிதர்கள், தரம் குறைந்த ஒரு சமூகம் மற்றும் குறைந்த தரத்திலான தேசங்களையே நாம் உருவாக்கிவிடுவோம்.

புத்திக்கூர்மை, நேர்மை மற்றும் ஊக்கம்

ஒரு ஆசிரியர் என்றால், அவரது தலையிலிருந்து பத்து பிஹெச்.டி பட்டங்கள் தொங்கிக்கொண்டு இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு ஆசிரியர் என்றால், அவர் அறிந்திருப்பதை வழங்குவதற்காகவே குழந்தைகள் காத்திருக்க வேண்டும் என்றும் அர்த்தமில்லை. ஒரு ஆசிரியர் என்றால், அந்த நபரின் முன்னிலையில், அவருக்கே தெரிந்திராத விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் என்பவர்கள், தற்போது உருவாக்கத்தில் இருக்கும் மனிதகுலம். அவர்கள் ஆசிரியர்களின் கைகளில் இருக்கும்போது, ஒரு ஆசிரியர் அவர்களிடம் உருவாக்குவது என்ன என்பது, ஒரு மனிதருக்குக் கிடைக்கக்கூடிய மாபெரும் பொறுப்பு மற்றும் உரிமைகளுள் ஒன்று. மற்றொரு உயிரை நம்மால் தொட முடிந்தால்தான் எந்த மனிதச் செயல்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, வேறொருவரது வாழ்க்கையை உங்களால் வடிவமைக்க முடிவது என்பது மகத்தான சிறப்புரிமை. ஒருவரது கரங்களில் இப்படிப்பட்ட ஒரு சிறப்புரிமை ஒப்படைக்கப்படும்போது, அதனுடன் உயர்ந்த மனத் திறமை மற்றும் உயரிய நேர்மையும், ஊக்கமும் இணைந்திருப்பது மிகவும் முக்கியமானது.

கேள்வி : ஒரு ஆசிரியர் புகழ் பெற்றவராக இருக்க வேண்டியது அவசியமா?

ஆமாம், புகழ் பெறுவது முக்கியமானது. புகழ் பெறுவது என்றால், மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் சமரசப்போக்கு பற்றி நான் குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் புகழ் பெற்றவராக இல்லையென்றால், அனைவரும் உங்களுக்கு எதிராக செயல்படுவதுடன், நீங்கள் திறனாளியாகவும் இருக்கமாட்டீர்கள். ஒவ்வொருவரும் விருப்பத்துடன் ஒத்துழைக்கும்போது மட்டும்தான் நீங்கள் மிகுந்த திறனுடன் இருக்கிறீர்கள். உங்களுடன் இணைந்து செயலாற்ற எவருக்கும் விருப்பம் இல்லையெனில், நீங்கள் சக்திசாலியாக இருக்கப்போவதில்லை.

ஒரு ஆசிரியர் எப்படி புகழ் பெறமுடியும்?

நீங்கள் எந்தவிதமான ஒரு நபராக ஆகவேண்டும் என்றால், நீங்கள் எதைப்பற்றியும் எதுவும் கூறவேண்டியதே இல்லை, ஆனால் ஒவ்வொருவரும் உங்களைப்போல் இருப்பதற்கு விரும்பவேண்டும். அப்போது ஒரு பள்ளியை நிர்வகிப்பது எவ்வளவு எளிதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களைப்போல் நடனமாடக் கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களைப்போல் பாடக் கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களைப்போல பேசக் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போது அவர்கள், “ஆஹா இப்படி இருப்பதற்குத்தான் நான் விரும்புகிறேன்,” என்று கூறுகிறார்கள்.

மூத்தவர்களிடத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ஒரு குழந்தை மூன்று வயதாக இருந்தபோது அவர்கள் செய்த அதே விஷயங்களை, ஒரு 14- வயதுடையோருடன் செய்ய விரும்புகின்றனர். உங்கள் குழந்தை மூன்று வயதாக இருந்தபோது எல்லா இடத்திலும் தவழ்ந்து வந்தது. நீங்களும் தவழ்ந்து விளையாடி அவர்களைப்போல பேசவும் முயற்சித்தீர்கள் – கூக்குபூபு, பீகாபு, – எல்லாமே நன்றாக இருந்தது. பின்னர் அவன்/அவள் எழுந்து நின்று, இப்போது 14 வயது பையனாக/பெண்ணாக வளர்ந்து நிற்கிறார்.

அதன் பொருள் என்னவென்றால், அவன்/அவள் தனக்கே உரித்தான ஆணாக/பெண்ணாக இருப்பதற்கு முயற்சிக்கிறார். அவன்/அவள் அவசரத்தில் உள்ளார்! அவர்கள் 3 வயதாக இருந்தபோது அவர்களுடன் நீங்களும் தவழ்ந்ததை அவர்கள் ரசித்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கு ஊஞ்சலில் ஆடவேண்டும். நீங்களும் அவர்களுடன் ஊஞ்சலாட வேண்டும். இன்னமும் நீங்கள் தவழ ஆசைபட்டால், அது வேலைசெய்யாது.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மதிப்புமிக்கவராக இருக்க விரும்பினால், அவர்கள் உங்களின் சொந்த குழந்தைகளோ அல்லது உங்களிடத்தில் கல்வி கற்பவர்களோ, மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் உங்களைப் பார்க்கும்போது, “ஆஹா நான் இப்படித்தான் இருக்க வேண்டும்!” என்று அவர்கள் சொல்லவேண்டும்.

நீங்கள் அவர்களைப்போல ஆடக் கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களைப்போல் பாடக் கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களைப்போல பேசக் கற்றுகொள்ள வேண்டும், அப்போது அவர்கள், “ஆஹா இப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன்,” என்று கூறுவார்கள். உங்களைப்போல இருப்பதற்கு அவர்கள் விரும்பிவிட்டால், விஷயங்களை நிகழச்செய்வதில் பிரச்சனை இருப்பதில்லை.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

கடத்தியவரை கட்டிப்பிடித்து அழுத குழந்தை… தாயுடன் செல்ல மறுத்த ஆச்சரியம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share