திமுகவில் நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம் நிர்ணயிக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று திருநெல்வேலி கிழக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளாக நாங்குநேரி, ராதாபுரம் நிர்ணயிக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமிக்கப்பட்டுள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் பொறுப்பாளராக ஆவுடையப்பன் இருந்து வந்தார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் `ஒன் டூ ஒன்’ என்ற நிகழ்ச்சி மூலம் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுகவில் நிர்வாக ரீதியாக பல அதிரடி மாற்றங்கள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
