பல நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சூட்டை தணிக்கும் வகையில் இன்று(ஜூன் 5) சென்னையின் பல இடங்களில் மாலை முதல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைக்கு முன்பிருந்தே, வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. அதிலும் மே மாதம் முழுவதும் மக்கள் மதிய நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் , அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில், இன்று திடீரென வானிலை மாறி பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதன்படி, சென்னையின் சைதாப்பேட்டை, வடபழனி என நகரின் பல முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம்,அம்பத்தூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வேப்பூர், விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், கயல்பட்டு, கலவை மற்றும் கடலூர் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாஸ்மாக் கடைகள் மூடல்: அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!
