சுட்டெரிக்கும் சூரியன்… வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!

Published On:

| By indhu

ஏப்ரல் 29-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 25) தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன்காரணமாக, ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஏப்ரல் 29 முதல் மே 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.

கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது.

அதிகபட்ச வெப்பநிலை 9 இடங்களில் 40-42° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், சேலத்தில் 41.1° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில் 40.7° செல்சியஸ், திருத்தணியில் 40.6° செல்சியஸ்,

நாமக்கல் மற்றும் திருச்சியில் 40.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஈரப்பதம்:

ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40-75 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 சதவீதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பதட்டத்துடன் வாக்களித்த விஜய்… காரணம் என்ன தெரியுமா?

ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு தர முடியாது : விஜயபாஸ்கர் வழக்கில் வாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share