பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்ட அரங்கில் போடப்பட்டுள்ள நாற்காலிகளில் ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு நிதி கேட்கும் க்யூஆர் கோடு ஒட்டியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று கேரளா சென்று அங்கிருந்து தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினம் மற்றும் நெல்லையில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக விமர்சித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று (பிப்ரவரி 28) மாலை மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் போடப்பட்டுள்ள நாற்காலிகளில் ராகுல் காந்தியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது, மகாராஷ்டிரா அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் பகுதியில் 47 ஏக்கரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் எதிர்பாராத டிவிஸ்டாக, பொதுக் கூட்டத்திற்காக போடப்பட்டுள்ள இருக்கைகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் படம் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி புகைப்படத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு நிதியளிக்குமாறு க்யூ ஆர் கோடும் ஒட்டப்பட்டுள்ளது.
இது பாஜகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாக்பூரில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ராகுல் காந்தியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
அந்த பொதுக்கூட்டத்துக்கு நாற்காலிகளை சப்ளை செய்த கான்ட்ராக்டர் பாஜக பொதுக் கூட்டத்திற்கும் ஸ்டிக்கரை கிழிக்காமல் சப்ளை செய்திருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக க்யூ ஆர் கோடு நாற்காலிகளில் ஒட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடையிலான… 2-ம் கட்ட மெட்ரோ திட்டப்பணி எப்போது தொடங்கும்?
ஸ்டிக்கர் ஒட்டுவது யார்?: மோடிக்கு கனிமொழி கேள்வி!
”சம்பவம் உறுதி” : ‘ஜெயிலர் 2’ கதையில் நெல்சன் வைத்த ட்விஸ்ட்!