மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடமளிக்க மத்திய அரசு மறுப்பு : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Published On:

| By christopher

மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடம் கிடைக்கவில்லை என்பதை நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஜெய்ராம் ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு உலக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 9.30 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “நம் நாட்டின் தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இறுதிச்சடங்குகள் நடக்கும் இடத்திலேயே அவர்களின் நினைவிடங்கள் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் எடுத்த முடிவுகளின் பலன்களை தேசம் இன்று அனுபவிக்கிறது. நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தான் , இந்தியாவை நெருக்கடியில் இருந்து விடுவித்து, பொருளாதார செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி நாட்டை அழைத்துச் சென்றார்.

பிரிவினையின் வலிகள் மற்றும் துன்பங்கள், அவரது முழு மன உறுதி மற்றும் உறுதியின் மூலம் அவர் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.இதனை கருத்தில் கொண்டு, மன்மோகன் சிங் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, அவரின் இறுதிச்சடங்குகளை, அவரது நினைவிடம் அமையக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடம் அளிக்க பாஜக அரசு ஒப்புதல் தர மறுக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று காலை, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை அளிக்கும் வகையில் நினைவிடம் கட்டப்படும் இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அவரது உலகளாவிய அந்தஸ்துக்கும், சிறந்த சாதனைகளின் சாதனைக்கும், பல தசாப்தங்களாக தேசத்திற்குச் செய்த அளப்பரிய சேவைக்கும், இந்திய அரசால் அவரது இறுதிச் சடங்கு மற்றும் நினைவிடங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை நம் நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இது இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை திட்டமிட்டு அவமதித்ததைத் தவிர வேறில்லை” என ஜெய்ராம் ரமேஷ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

தலைவன் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு!

டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்… எடப்பாடி முக்கிய முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share