8வது சம்பள கமிஷன் விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள கமிஷன் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சம்பள கமிஷன் தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. நவம்பர் 3ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்ட 8வது சம்பள கமிஷனுக்கான விதிமுறைகளில் (Terms of Reference) பல முக்கிய கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
குறிப்பாக, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய திருத்தம் இதில் சேர்க்கப்படாததும், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காததும் ஊழியர்களில் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மாற்றியமைக்கக் கோரி ஊழியர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு, இந்த கமிஷன் நீண்ட கால அளவில் தங்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் கடந்த பல மாதங்களாகவே தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். 2022ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் முதலே ஏழு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஜூலை 9ஆம் தேதியன்று ஒரு-நாள் வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு தங்கள் குறைகளைத் தீர்க்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கூட்டமைப்பு குற்றம்சாட்டுகிறது. அதற்கு மாறாக அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சங்கங்களை அங்கீகரிக்காமல் இருப்பது அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்வது, சங்க நடவடிக்கைகளுக்காக தலைவர்களை இடைநீக்கம் செய்வது அல்லது பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். இந்த பிரச்சனைகள் அரசு ஊழியர்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளன. 8வது சம்பள கமிஷன் விதிமுறைகள் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு உச்சக்கட்டமாக மாறியுள்ளன.
இந்த நிலைமையைக் கண்டித்து ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் செய்ய அழைப்பு விடுத்துள்ளன. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16ஆம் தேதியன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் மதிய உணவு நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அதேபோல, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாநில மாநாடுகள் நடத்தப்படும் என்றும், அதன் பிறகு எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், நான்கு தொழிலாளர் சட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 26 அன்று நடைபெறும் போராட்டங்களிலும் இந்த சங்கங்கள் பங்கேற்கின்றன. இந்த சட்டங்கள் வர்த்தக சங்கங்களின் செயல்பாடுகளை மிகவும் கடினமாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். தற்போது போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசுக்கு ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களை உள்ளடக்கியும், சங்கங்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் 8வது சம்பள கமிஷனுக்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போதைக்கு, விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்து அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே பெரிய பூகம்பமாக வெடிக்குமோ என்று அஞ்சப்படுகிறது.
